அம்மத்தாள்
பக்கங்கள் படபடக்க
எப்போதும் என்னுள் விரியும்
நைந்து பழுப்பேறிப்போன
பழந்தமிழ்ப் புத்தகம்
நான் குழையும்போதெல்லாம்
திறந்து கொள்ளும்
அவளின்
பொக்கைவாய்ச் சொர்க்க வாசல்
மரணக்கதவுகளால் மூடப்பட்டும்
மறுபடி மறுபடி மனசுதட்டும்
அவள் நினைவசைவு
அவள் தந்த கருவாடும் கஞ்சியும்
கம்ப்யூட்டர் யுகத்தின்
நாசிகள் அறியா
வாசனை அற்புதம்
சுருங்கிய தோல் மடிப்புகளுக்குள்
நுழைந்தும் அலைந்தும்
என் ஜீவன் நுகர்ந்த பந்தம்
இன்னும் தேங்கிக் கசிகிறது
உயிர்ச்சுனையில்
கொட்டவும் முடியாமல்
பத்திரப்படுத்தவும் முடியாமல்
திரிந்து போன என்
வாழ்வுப் பாலுடன்
அவளது நினைவுகளும்.
மேனா. உலகநாதன்
Comments
Post a Comment