உயிர்ப்பு


பக்கென்ற ஒலியுடன்
பறக்கின்றன பட்சிகள்


தப்பு, கொம்புகளின் ஒலி
உச்சத்தை எட்ட
விண்ணெண அதிர்கிறது வெளி


அங்கும் இங்குமாய்
அலை மோதிய
ஈ ஒன்று
சவத்தின் மீது வந்தமர்கிறது


ஓலமும், ஒப்பாரியும்
உன்மத்தம் கொண்டு
சூழலில் உறைகின்றன


சவத்தைச் சுமந்து
சவங்களின் ஊர்வலம்


நீண்ட மழையின் ஓய்வு
ஈரநாவு கொண்டு
மெல்லிய சலனங்களையும் கூட
விழுங்கிக் கொண்டிருந்தது


இலையில் இருந்து வீழும்
ஒரு துளி வெள்ளமென
பெருக்கெடுக்கிறது


சவத்துக்கு உயிர் வந்ததும்
சுமக்க இலகுவாய் இருந்தது.

Comments