மக்காத ஓலைகள்
இன்று
விசுக்கென்று
வந்துவிட்டது
அந்த இடம்
நீண்ட தூர
சைக்கிள்
பயணத்தின்
பிறகு
அதைக் கண்டடையும்
போது
உள்ளத்தின்
சிறகுகள்
வானளாவ
விரிந்து
படபடக்கும்
வியர்வையில்
நனையும்
புன்னகை
மின்னி
மிளிரும்
காராஞ்
செடியும்
சூராம்
பழமும்
கொண்டையும்
குஞ்சமுமாய்
குலுங்கும்
பஞ்சவர்ணப்
பூக்களும்
மஞ்சள்
வண்ணத்தில்
ஆங்காங்கே
பூத்து
கூடி நின்று
குதூகலித்து
பேசிச்
சிரிக்கும்
ஆவாரம்
செடிகளும்
இன்னும்
பெயர் அறியா
தாவரங்களும்
தங்கள்
மூச்சணுக்களைக்
கலந்து
பிசைந்து
காற்றுக்குள்
பொதிந்தனுப்பும்
அந்த வாசனைக்கு
என்ன பெயர்?
வெயிலின்
மீதேறி
வந்தெமைத்
தழுவிய
அந்தச்
சுகந்தத்தை
இன்றுவரை
வேறெங்கும்
என்னால்
நுகர்ந்துணர
முடியவில்லை
அதோ வந்தாச்சு
ஒற்றைப்
பனை
பள்ளிக்குச்
செல்லும்
தூரத்தின்
சரிபாதியை
கடந்த நிம்மதி
இனி உற்சாகம்
கரைபுரளும்
கால்கள்
வேகமெடுக்கும்
சைக்கிள்
சக்கரங்கள்
காற்றில்
மிதக்கும்
பள்ளி செல்லும்
வரை
பற்கள்
மூடாது
முதல் நாள்
வீட்டுக்
கணக்கு
முடிக்காமல்
போனதற்காக
நாகலிங்கம்
சார்
கிள்ளி
அடிக்கும்
போது
தானாகவே
மூடிக்கொள்ளும்
என்பது
வேறு சங்கதி
வீடு திரும்பும்
போது
ஒற்றைப்
பனை
நர்த்தனமாடும்
ஓலைகள்
காற்றில்
படபடத்து
இரைச்சலிட
ஆனந்தக்
கூத்தாடும்
குதிபோடும்
கூட ஒரு
பனை
இருந்து
ஆடினால்
இன்னும்
நன்றாக
இருந்திருக்கும்
அந்தப்
பனையை
ஒற்றையாக
நட்டவர் யார்?
இன்று
நான் சைக்கிளில்
செல்லவில்லை
காலம் விழுங்கியது
போக மீந்த
எச்சமாக
திரும்பிய
போது
அந்த இடம்
வெறுமையாக
இருந்தது
ஒற்றைப்
பனை
நின்றதற்கான
சுவடு கூட
இல்லை
வெட்டப்பட்டதா?
வீழ்ந்ததா?
ஓலைகள்
என்னவாகி இருக்கும்?
நினைவுகளின்
ஈரம் சுமந்து
காற்றில்
பறந்திருக்க
முடியாது
மக்கிப்
போகாத
வரலாறுகள்
அனைத்தும்
ஒற்றைப்
பனையின்
உதிர்ந்து
புதைந்த
ஓலைகளை
தோண்டி
எடுத்து
எழுதிக்
கொண்டிருந்தன
அவற்றின்
ரகசிய
நடவடிக்கைகளை
அறிந்து
கொண்ட
அதிர்ச்சியோ
என்னவோ
வெட்டவெளியில்
பெருங்காற்றாய்
ஊளையிட்டு
புழுதி
கிளப்பி
சருகுகளை
வாரி இறைத்தபடி
மூர்க்கத்துடன்
காளியாட்டம்
போட்டன
மயிர்க்கூச்செரிந்த
படி
வீடு சென்ற
போது
“இப்பிடியா
புள்ள மழையில
நனைஞ்சுக்கிட்டே
வருவ…?”
என்று
செல்லக்
கோபத்துடன்
கேட்கவும்
தலைதுவட்டி
விடவும்
யாருமில்லா
அமைதி யின்
ஓலம்
அச்சுறுத்தியது
வெற்றிலையை
உதக்கிய
படி
விரிந்து
படர்ந்தது
ஆத்தாளின்
புன்னகை.

Comments
Post a Comment