கொலைகாரன்

 


 


செல்பேசி

இணைப்பை

அவன் துண்டித்த

வேகம்

என்னைப் படபடக்க

வைத்தது

 

அவனுக்கும் எனக்கும்

இடையே

கோபப்பட

காரண காரியங்கள்

ஏதுமில்லை

 

மனம்

வெறுமையாகும் போது

காரணமின்றி

அவனை

அழைப்பேன்

 

நான் எதிர்பாராத

விளக்கம் ஒன்றைக் கூறி

திடுக்கிட வைப்பான்

 

அதுவே

அப்போதைக்கு

எனக்கு

போதுமானதாக

இருக்கும்.

 

புரை ஏறுதலை

நிறுத்தும்

பொய்யதிர்வைப்

போன்ற

விசித்திரமான

சிகிச்சை அது

 

சொல்லப் போனால்

அன்று அவனை

அழைக்க

ஒரு காரணம்

இருந்தது

 

விடாத

பின் கழுத்து வலி

குறித்து

அவனுடன்

பகிர்ந்து கொள்ளும்

ஆயாசத்துடன்தான்

அழைத்தேன்

 

வலி பற்றி விவரித்தேன்

வலியின் அனுபவங்கள்

அவனுக்கும் இருந்தது

 

மருத்துவர்

ஒருவரைப்

பரிந்துரைத்தான்

 

அழைத்த போது

அவர் வேலையாக

இருந்தார்

 

பின்னர்

மருத்துவரும் அழைக்கவில்லை

நானும் அழைக்கவில்லை

வலி தொடர்ந்தது

 

ஆனால்

அவனை நான்

மீண்டும் அழைத்தேன்

 

மருத்துவரிடம்

பேசினாயா?

 

அழைத்தேன்

வேலையாக

இருந்தார்.

 

வலி உனக்கா

அவருக்கா?

 

பேச்சின்

இடைவெளியில்

கழுத்தின் வலி

அதிகரித்தது

விண்விண் என்றது

 

கனல் தகிக்கும்

சொற்களுடன்

அவன் தொடர்ந்தான்

 

அறுபதாண்டு காலத்தை

கடந்து விட்டாய்

 

நீ யார் என்பதை

அறிய நினைத்ததுண்டா?

 

உனக்கு என்ன

வேண்டும் என்பதை

உணரச் சற்றேனும்

முயன்றதுண்டா?

 

உடல்வலிதான்

உன்னை

உனக்கு நினைவு

படுத்துகிறது

 

வலிக்கேனும்

நன்றி சொல்லு

நாலும் கெட்ட

மூடனே

 

எஜமான் உத்தரவுப்படி

பாய்ந்தோடும்

நாய் கூட

தன் இலக்கறியும்

 

நீ இலக்கை

மட்டுமா இழந்தாய்

 

உன் சிறகுகள்

ஒவ்வொன்றையும்

உருப்படியற்ற

ஓட்டத்தின்

உராய்வுகளில்

இழந்தாய்

இழந்து

கொண்டே

இருக்கிறாய்

 

உனக்கான

வெளி அனைத்தையும்

உதாசீனப் படுத்தி

வெளியேறினாய்

 

உன் தனித்துவத்தை

அன்றாடம் எனும்

அமிலத்தில்

முக்கிக் கரைத்தெறித்து

புன்னகைத்தாய்

 

யாருக்காகவோ

ஓடிக் கொண்டிருக்கிறாய்

 

நினைவாகக் கூட

உன் சுவடுகளை

அவர்கள்

சுமக்கப் போவதில்லை

 

இப்போது

குற்றுயிரும்

குலை உயிருமாக

திரும்பிப் பார்க்கவும்

திராணியற்று

திகைத்து நிற்கிறாய்

 

உன் பிறப்பருமை

உணராமலேயே

உன்னை

மெல்ல மெல்லக்

கொன்றுவிட்டாய்

 

கொல்லாமை

பிற உயிர்களை

கொல்லாமல்

இருப்பதற்கு

மட்டுமல்லடா

மடையனே

 

சுயமெனும்

உயிர்ப்பையும்

கொன்றுவிடக்

கூடாதென எச்சரிக்கும்

அறக்கூற்றும்

அதுதானடா…

 

கொன்று விட்டாய்

உன்னில்

உனக்கான

உயிர்ப்பாக

உயிர்த்திருந்த

அனைத்தையும்

ஈவிரக்கமே இல்லாமல்

கொன்றுவிட்டாய்

 

அவன்

உரையாடல்

துண்டிக்கப்பட்டதன்

அதிர்வால்

பின் கழுத்தில்

இருந்த வலி

உச்சந்தலை வரை

பரவியது

 

ஜன்னலோரம்

பின்னிய

வலை இழைகள்

அனைத்தும்

அறுந்து

கடைசியாகத்

தொடுக்கிக் கொண்டிருந்த

ஒற்றை இழையில்

தொங்கியபடி

துடித்த சிலந்தி

எனைக் கண்டதும்

அமைதியானது.

Comments

Popular posts from this blog

மக்காத ஓலைகள்

வாசனை