வாசனை
விருப்பமில்லைதான்
தெருக்களில் சிதறிக்கிடக்கும்
பூக்கள் மிதிபடுகின்றன
மலர்களும் நிணமும் கலந்த வாசனை
நிறமற்ற காலத்தைச் சுமந்து வந்து
நாசிக்குள் திணிக்கிறது
வியர்வையாய் கசியும்
பிரிவின் ஆற்றாமை
கேள்வித் துளிகளாய்
மண்ணில் வீழ்ந்து
நிழலென உயிர்த்து
பின்தொடர்கிறது
கடந்து போகும்
மேகத்திரளின்
மெல்லிய இருட்டில்
கலந்து
என்மேல் கவிகிறது
கேள்விக்குறி போல்
எனை வளைத்து
முதுகில் ஏறி
நிற்கும்
நிழலின் சுமை
தாளாமல்
நெஞ்சடைக்கிறது
விண்ணெனத் தெறிக்கும்
நெற்றிப் பொட்டில்
இருந்து சிதறும்
பொறியின்
வெளிச்சத்தில்
மிதக்கும்
சொற்களைப் பிடிக்க
யத்தனித்த போது
நேர்கோடாக
நிமிர்கிறேன்
வாழ்வின் வாசனை
பூமாரி பொழிகிறது.

Comments
Post a Comment