Posts

Showing posts from May, 2021

கவித் துளிகள்...

பழுத்து உதிர்ந்த இலையில் இருந்து நழுவி என்மடியில் விழுந்து தவழ்ந்த காலத்தின் பாடலில் திளைக்கிறேன் எனைத் தொல்லை செய்யாதீர் .......... என் புன்னகை விழுங்கி விடுமுன் தப்பி விடு உன் அகந்தை உனைக் காக்குமெனில் ........... நீண்ட தூரம் வலிகளின் ஊடாக பயணித்த களைப்பில் நிழலென நம்பி அமர்ந்து விட்டேன் நச்சு மரத்தின் அடியில் ............. எல்லோரையும் போலத்தான் கிணற்று நீரில் தெரியும் என் பிம்பத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் நழுவி உள்ளே விழுந்த தருணம் தான் தெரியவில்லை

பாழ்

தலைகோதப் பயிர்களின்றித் தவிக்கும் காற்று மேய நிலமும் புல்லுமின்றி அங்கும் இங்குமாய்ச் சில மாடுகள் மனிதர்களின் அரவம் தேடி வெயிலின் மூர்க்கத்துடன் இறுக்க முயங்கிக் கிடக்கும் வெறிச்சோடிய தெருக்களின் மௌனம் தெருமுனை வீட்டுத் திண்ணையில் யாருக்காகவோ எப்போதும் காத்திருந்து தேயும் மூதாட்டியின் காலத்தைச் சுற்றி அடர்ந்து படரும் தனிமை பாரதிராஜாக்களின் பரிவாரங்களை வரவேற்க பசுமையான கதைகளும் காட்சிகளுமின்றி பாழ்வெளியாய் உறைந்து கிடக்கும் எமது மண் நவீனத்தின் நிராகரிப்பில் நசிந்து துடிப்படங்கி மரணப் படுக்கையில் கிடக்கும் அதனை நினைவுகள் என்ற பெயரில் கீறும் எழுத்துகளில் பிணவாடை அடிக்கிறது

மரிக்காத கனவுகள்

தேநீரின் ஆவி நாசிகளைத் தழுவுகிறது இருவரும் எதிரெதிரில் அசையாமல் முகம் இறுக மனம் அவிழ்ந்து சிதறுகிறது உருண்டோடிய பல ஆண்டுகளை சேகரித்து வந்த ஆயாசம் அவள் முகத்தில் மௌனித்துக் கிடந்த உணர்ச்சிகளின் ஊடாக கிளர்ந்து கனிகிறது முதிர்ந்த யௌவனம் எங்களைச் சுற்றி உடைந்து சிதறிக்கிடக்கும் வாழ்வுத்துண்டுகளில் தேடித் தேடிக் களைக்கிறோம் பெருக்கெடுக்கும் இறந்த காலத்தின் நதியின் அடியில் இப்போது நீந்தித் திளைக்கிறோம் மரிக்காத கனவுகளை மீன்களைப் போல் தின்று சுகிக்கிறோம்

மான்

கீழ்மையும், சிறுமையும், கயமையும்  மண்டிய வனத்தின் பெருமூச்சில் திளைக்கிறது அந்த மான் வெறித்தபடி துள்ளி ஓடும் அதன் குழந்தைமை பார்த்துச் சிரிக்கிறது அந்தக் கொடும் வனம் உயிர்ப்புக்கும் சாவுக்குமான போராக நடக்கும் தன் வாழ்வைக் கொம்பு கொண்டு துரத்த முயலும் அதன் புள்ளிகளில் இருந்து பெருக்கெடுக்கிறது கருணை

காத்திருப்பு

வரிபிறழ்ந்த எழுத்துக்களைப் போல்  வானில் பறந்து செல்லும் புறாக்களின் கால்களில் எனக்கான ஒலை எதுவும் இல்லை... எத்தனையோ ஓலைகள் அனுப்பியதாகச் சொல்லுகிறார்கள் எதுவும் வந்து சேரவில்லை சேதிக்காகக் காத்திருந்த காலம் எனைச் சுற்றிலும் புற்றாக வளர்கிறது நாக்கைத் துருத்தித் துளாவியபடி அதிலிருந்து வெளியேறி நீளும் பாம்புகளுடன் குடியிருக்கப் பழகிவிட்டேன் சுற்றிவளைக்கும் பாம்புகளின் மிருதுத்தன்மையில் உடலும் மனமும் சுகம் கொள்கின்றன

தகிப்பு

புழுக்கத்தின் அசைவில் இருந்து வீசத்தொடங்கியது தென்றல் மலர்கள் பொசுங்க இலைகள் வதங்க கைகளை வீசி நடந்தது மணல் பெருகிய நதியில் மிதந்து தகித்தது தண்ணீருக்காக அலைந்து கொண்டிருந்த மான்களின் ரோமங்கள் தீய்ந்து கருக  தழுவிச் சோர்ந்து  தவித்தது  வியர்வையின் துளியில் உயிர்த்தது நதி.

உயிர்ப்பு

பக்கென்ற ஒலியுடன் பறக்கின்றன பட்சிகள் தப்பு, கொம்புகளின் ஒலி உச்சத்தை எட்ட விண்ணெண அதிர்கிறது வெளி அங்கும் இங்குமாய் அலை மோதிய ஈ ஒன்று சவத்தின் மீது வந்தமர்கிறது ஓலமும், ஒப்பாரியும் உன்மத்தம் கொண்டு சூழலில் உறைகின்றன சவத்தைச் சுமந்து சவங்களின் ஊர்வலம் நீண்ட மழையின் ஓய்வு ஈரநாவு கொண்டு மெல்லிய சலனங்களையும் கூட விழுங்கிக் கொண்டிருந்தது இலையில் இருந்து வீழும் ஒரு துளி வெள்ளமென பெருக்கெடுக்கிறது சவத்துக்கு உயிர் வந்ததும் சுமக்க இலகுவாய் இருந்தது.

சரிதான்

எதுவும் சரியில்லாத பொழுது எல்லாம் சரிதான் வருவதாக சொன்னவன் போகிறான் போவதாகச் சொன்னவன் வருகிறான் புன்னகைக்குள் இருந்து சீறித்துளாவும் பாம்பின் நாவுகள் வெயிலோடு மழை... காலம் மாறிவிட்டதாக சொல்கிறார்கள் வெயிலும் மழையும் தொட்டுக் கொள்ளக்கூடாதா என்ன? வெயில் குளிர்கிறது மழை தகிக்கிறது எதுவும் சரியில்லாத போது எல்லாம் சரிதான். சிலந்தியிடம் சிக்கிய பூச்சியின் நியாயத்தை கேட்பவர் யார்? இப்போது படபடக்கும் பூச்சியைக் கண்டு பயம் கொள்கிறது சிலந்தி எதுவும் சரியில்லாத போது எல்லாம் சரிதான் சமரசங்களின் தாலாட்டில் சமர்த்தாய்த் துயில் கொள்கிறது சுயம்.

எப்போது?

முடிவின் பயணம் தொடங்கிவிட்டது அதன் வாலைப் பிடித்தபடியே பின்தொடரும் எனது வழி… ஒற்றையடிப் பாதையாய் குறுகலான செடிப்புதர்களாய் மேடும் பள்ளமுமாய் கற்களும் முற்களுமாய் அவ்வப்போது அகன்ற சாலையும்… சுவடுகளைத் திரும்பிப் பார்க்க மனமின்றி பயணிக்கும் எனது மூர்க்கம் வேட்கை தணிந்து இளைப்பாறுவது எப்போது….?

பாறையின் புன்னகை

பாறைகளின் மௌனம் உங்களுக்குப் பிடிக்குமா அலைகளை விழுங்கிச் செரிக்கும் அதன் உன்மத்தம் வாழ்வின் பருகத் தீராத மது மோதிச் சிதறும் அலைத்துளிகளின் திவலைகள் தரும் போதத்தில் இன்னும் இன்னும் இறுக்கம் கொண்டு புடைக்கும் அதன் திமிர் ரசிக்கத் தீராத சாகசம் ஆங்காரத்துடன் வருவதும் அடிபணிவதுமாய்த் திரும்பும் அலைகளின் தோல்வியில் அதன் கம்பீரம் மேலும் உயிர்க்கிறது எல்லோரும் நினைத்தார்கள் வாழ்வின் மூர்க்கம் விளிம்பில் நிற்கும் எமை வீழ்த்தி விடுமென்று எறும்பூரத் தேயும் கல்லோ நாம் கரைவதற்கு காலம் சிதறுகிறது கடவுள் அழுகிறான் நம்பிக்கை அனைத்தும் வற்றிப் போன கடலின் வெறுமை அவனைச் சஞ்சலம் கொள்ளச் செய்கிறது. இப்போது பாறையின் புன்னகைக்குள் அவன் மெல்லப் புதைகிறான்.

நெருடல்

அவரைப் பார்த்தும் பாராதவனாய்த் திரும்பிக் கொண்டேன் பார்க்காமல் போகிறார் என்பதைப் பார்க்காமல் பார்த்திருக்கலாம்தான் கேள்வியும் பதிலும் உள் நெருடியது பார்த்தும் பாராமையை பார்த்தும் பாராமல் சென்ற அவரின் பக்குவம் பார்த்தும் பாராத நான்.    மேனா. உலகநாதன்

அம்மத்தாள்

  பக்கங்கள் படபடக்க எப்போதும் என்னுள் விரியும் நைந்து பழுப்பேறிப்போன பழந்தமிழ்ப் புத்தகம் நான் குழையும்போதெல்லாம் திறந்து கொள்ளும் அவளின் பொக்கைவாய்ச் சொர்க்க வாசல் மரணக்கதவுகளால் மூடப்பட்டும் மறுபடி மறுபடி மனசுதட்டும் அவள் நினைவசைவு அவள் தந்த கருவாடும் கஞ்சியும் கம்ப்யூட்டர் யுகத்தின் நாசிகள் அறியா வாசனை அற்புதம் சுருங்கிய தோல் மடிப்புகளுக்குள் நுழைந்தும் அலைந்தும் என் ஜீவன் நுகர்ந்த பந்தம் இன்னும் தேங்கிக் கசிகிறது உயிர்ச்சுனையில் கொட்டவும் முடியாமல் பத்திரப்படுத்தவும் முடியாமல் திரிந்து போன என் வாழ்வுப் பாலுடன் அவளது நினைவுகளும். மேனா. உலகநாதன்

மிருகப் பிரவேசம்

அந்த விசித்திர மிருகம் வந்தே விட்டது கொன்று குவித்து ரத்தம் சுவைத்த சுவடுகள் உலர்ந்து உதிர்ந்து போனதாக நினைப்பு உதடுகளைச் சப்பியபடியே அதன் அடுத்த உலாவைத் தொடங்கி விட்டது வெறுப்பு அரசியலின் வீரதீர முழக்கத்துடன் தன் அகண்ட கனவை நனவாக்கும் பயணத்தையும் தான் தேசிய ஒருமைப்பாடு வந்தே மாதரம் ராணுவ பக்தி வீரர்களுக்கு அஞ்சலி என வசீகரமான அரசியல் ஒப்பனைகள் அனைத்தையும் புனைந்து வந்து அரங்கேறிய அதன் நர்த்தனத்தை ரசிப்பதில் நமக்கு எந்த வெட்கமும் இல்லை தமிழில் வணக்கம் சொன்னால் போதும் எவனும் நம் தலைவனாகி விடுவான் மற்றபடி கர்ப்பிணிப் பெண்ணின் கருவறை பிளந்து பச்சிளம் சிசுவை அவள் கண்முன்னாலேயே கூறுபோட்ட குஜராத் குரூரம் குறித்தெல்லாம் நமக்கென்ன கவலை எங்கோ ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு நேர்ந்தது அவள் என்ன நம் சகோதரியா கதறவும் பதறவும் நமக்குத் தேவை இப்போது அரசியல் சுத்திகரிப்பு இனச் சுத்திகரிப்பைப் போல (26.09.2013)

உதிர்ப்பு

வாழ்வின் தகிப்பில் கொதித்து அடங்குகிறது உயிர் உலை மெல்லக்கீழிறங்கிக் குளிர்ந்து உரையும் குருதியின் திட்டில் படிகிறது என் ஓவியம் சிரிக்க மறுக்கும் இதழ்களில் இருந்து உதிர்கிறது ஒரு துளிப் புன்னகை உடலெங்கும் நமநமக்கும் தினவில் பெருக்கெடுக்கிறது உன்மத்தம் உக்கிரமாக உராய உராய செதில்களைப் போல உதிர்கிறது சிறுமை

சோரம்

உன்குரல் தேய்கிறது அதில் தொனிக்கும் நடுக்கமும் கூட என்னுள் படிகிறது தெளிவாகத் தெரிந்த முகம் இப்போது கலங்கிய தண்ணீரில் சிதறுகிறது பிம்பமாய் அது பிம்பமில்லை உன் முகம்தான் நடிகனின் ஒப்பனையை விட துரிதமாக கலைகிறது உன் பொய்மை அத்தனை ரசமான சொற்களை எங்கிருந்து கொணர்ந்தாய் நண்பா தொட்டிக்குள் மீனைப்போல் அலையும் அந்தச் சொற்கள் இப்போது அனாதையாகி விட்டன போதும் இனியும் தந்திரமென்று சொல்லி நட்பு வேடம் பூணாதே பரத்தையின் அறத்தைக் கூட பேணாத நட்பின் சோரத்தை என்னவென்பது. மேனா.உலகநாதன் *

சருகுகளின் விசும்பல்

உலர்ந்து சிதறிக்கிடந்த சருகுகளுக்கு  எனை வரவேற்பதில் உவப்பில்லை வேண்டா விருந்தாளியாகவே அந்த வெளிக்குள் நுழைந்தேன் எனினும் சருகுகள் மௌனமாகக் கிடந்து விடவில்லை பாதங்கள் படும்போதெல்லாம் விசும்பின ஏன் இத்தனை காலம் வராமல் போனாய்? பவளமல்லிச் செடியையும் மல்லிகைப் பந்தலையும் மட்டும் யாரோ பராமரிக்கிறார்கள் போலும் மற்றவை… பூச்செடிகளைப் பறித்தெறிவது காலத்தால் முடியாத காரியமா என்ன? முப்பது ஆண்டுகளுக்கு முன் பூத்துக் குலுங்கிய மலர்களின் வாசனை நாசிகளைத் தழுவியபோது  நரம்புகள் கிளர்ந்தன நினைவோடையின்  அடிஆழப் படிமங்களில் இருந்து கலங்கி மிதந்தது அவள் ஸ்பரிசம்

நன்றாகவே….

சில மௌனங்கள் பல புறக்கணிப்புகள் பாடம் நடத்தியபடியே நகர்கிறது காலம். இலையுதிர்கால மரத்தில் இருந்து உதிரும் உயிர்த்துளி வெள்ளமெனப் பெருகிப் பரவ துளிர்க்கும் பசித்த மானுடம் வசந்தம் சூல்கொள்ளும் பூக்களின் தேன் துளி விஷமெனக் கரைந்து கொல்லும் விதி எனும் கற்பிதத்தை வீழும்போதே எழும் எமது வீறுதனில் மோதிச்சிதறும் அவர்தம் உன்மத்தம் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. மேனா.உலகநாதன்

கனன்றடங்கி

பாலை பத்திரமாக பாதுகாத்தன பூனைகள் நரிகள் வஞ்சம் தொலைத்து மனம் திறந்து பேசின பாம்பின் நாவுகளில் அமுதம் சுரந்தது ஓநாய்களோ ரத்தம் பிடிக்காமல் பழச்சாறு கோரின அச்சம் கனன்றடங்கும் புன்னகை தவழ துயில்கிறது தூத்துக்குடி (27.05.2018 ல் எழுதியது)

நிழலின் வலி

Image
  இருளில் கரைந்து  வெளிச்சத்தில் உயிர்த்து உடலொடு ஓடி மலைகளில் நெளிந்து மரத்தடி மறைந்து மனிதர்களை விட்டு  நீங்காமல் பின் தொடர்வதில்தான் எத்தனை இடர் இந்த நிழலுக்கு

பெரும் வலி

Image
  உதிர்ந்து விழும் போதே  காற்றில் எழுதி வந்த  தன் சரிதையின்  கனம் அழுத்த மண்ணில் வீழும் மலர்களின் இறுதி மூச்சில் கலந்திருக்கும் விம்மலை மொழிபெயர்த்து  கூவிய படியே  சுற்றித் திரிகிறது உயிர்வளி பெரும் வலியுடன்