நிற்றல் - மேனா.உலகநாதன்
இத்தனை அழகிய தீவு
எனக்குள் உருவானதெப்படி
கொந்தளிக்கும்
மனக்கடலின்
ஆர்ப்பரிப்புக்குப்
பணியாத
பேரமைதி பேரழகு
பெரும் பசுமை
ஆழி சினந்து அலைகள்
எப்போதும் கரை
தாண்டலாம்
தீவு திட்டாகலாம்
பறவைகள், மரங்கள்,
பூக்கள், காய்கள்,
கனிகள்
அனைத்தும் ஒரு
நொடியில்
புதையுண்டு போகலாம்
ஆனாலும் அந்த
ஒற்றைப் பசும்புல்லுக்கு
அச்சமில்லை
நுனியில் துளித்
திவலையுடன்
நிமிர்ந்து நிற்கிறது
கடலைப் பிரதிபலித்தபடி

Comments
Post a Comment