தோழர் நல்லகண்ணு என்ற அந்தப் பேரெளிமை!
என்ன சொல்வது... அப்பழுக்கில்லா அரசியலுக்கு, அரிதினும், அரிதான சான்றாக உயிர்த்திருந்த தோழர் நல்லகண்ணு என்ற அந்தப் பேரெளிமை நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டது. "வெறும் செய்தி - அரசியல் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், படைப்பாக்கத்தின் பக்கம் கவனம் செலுத்து" என்று பேட்டிக்காகவும், பிற பணிகளுக்காகவும் சந்தித்த போதெல்லாம் தந்தையைப் போல் அறிவுரை சொன்ன ஆசான்! அத்தனை பெரிய தியாகங்களைச் செய்த தலைவர், அதன் சுவடுகளே தெரியாமல் எளிய இதழாளனான என்னுடன் பழகிய அந்தப் பொழுதுகளின் நினைவுகள், இன்றும் எனக்குள் ஆசுவாசம் தந்து சிறகடிப்பவை! இனி அவரைக் காண்பதோ, உரையாடுவதோ சாத்தியமில்லை என்ற தன்னுணர்வு பெரும் வலியாய் உணர்வு முழுவதும் பரவுகிறது. என்னைப் போல் எத்தனையோ எளிய உயிரிகளின் தோழனாக, தந்தையாக அரவணைத்த பெருங்கருணைப் பேராளனின் பிரிவு தாங்க முடியாத துயரைத் தருகிறது. சிவப்பு வண்ணத்திற்கு - அன்பு, பரிவு, பரந்த உள்ளம், எளிமை, நேர்மை, இனிமை என எத்தனையோ நேர்மறை அடையாளத்தைத் தந்த ஆகச்சிறந்த அரசியல் ஆளுமை! இருளை விழுங்கி ஒளிரும் நிலவைப் போல, இந்தச் சமூகத்தின் சிறுமைகள் அனைத்தையும் விழுங்கிச் செறித்து சி...